மகாலட்சுமி அவதரித்த தினமான லட்சுமி ஜெயந்தி நாளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்தால் மகாலட்சுமியின் அருள் எப்போதும் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மகாலட்சுமி பாற்கடலில் இருந்து அவதரித்த தினம், மாசி மாத பெளர்ணமி தினமாகும். அதனால் இந்த பெளர்ணமியை வசந்த பெளர்ணமி, மந்தன பெளர்ணமி என பல பெயர்களில் அழைப்பதுண்டு.
இத்தகைய சிறப்பு மிக்க லட்சுமியின் அவதார தினம் இந்த ஆண்டு மார்ச் 14ம் திகதி, மங்கலகரமான வெள்ளிக்கிழமையில் வருகிறது. மார்ச் 13ம் திகதி காலை 11.40 மணிக்கு துவங்கி, மார்ச் 14ம் திகதி பகல் 12.57 மணி வரை பெளர்ணமி திதி உள்ளது.
சூரிய உதய நேரத்தில் என்ன திதி உள்ளதோ அது அந்த நாளுக்கான திதி என்பதால், மார்ச் 14ம் திகதியை பெளர்ணமி தினமாக கணக்கில் எடுத்துக் கொண்டு, மகாலட்சுமி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
லட்சுமி ஜெயந்தி அன்று, அவரது சிலையை அழகாக அலங்கரித்து, நான்கு திரிகள் கொண்ட விளக்கை ஏற்றி மகாலட்சுமியை வழிபட வேண்டும். இது அறிவு, ஞானம், செழிப்பு ஆகியவற்றை குறிப்பதாகும். மகாலட்சுமியின் படம் அல்லது சிலைக்கு முன்பாக வலம்புரி சங்குகள் வைத்து வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.
இது மகாலட்சுமிக்கு மிகவும் பிரியமானது என்பதால் வீட்டில் எப்போதும் மகாலட்சுமியின் அருளை நிலைத்து இருக்க செய்யும். மகாலட்சுமியின் சிலை இருந்தால் வாசனை பொடிகள் கொண்டு அபிஷேகம் செய்யலாம்.
மகாலட்சுமிக்க வாசனை மலர்கள் சூட்டி, அவளை போற்றி துதிக்கும் பாடல்களை பாடி, ஆரத்தி காட்டி வழிபட வேண்டும். மகாலட்சுமி 108 போற்றி, கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற பாடல்களை பாடி மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.

மகாலட்சுமிக்கு விருப்பமான பால் பாயசம் அல்லது ஏதாவது ஒரு இனிப்பு செய்து நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். வீடும் மணக்கும் வகையில் தீப தூபங்கள் காட்டுவது, நெய் விளக்கு ஏற்றுவது ஆகியன மகாலட்சுமிக்கு பிரியமான ஒன்றாகும். மகாலட்சுமிக்கு படைத்த இனிப்புக்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதால் மகாலட்சுமியின் மனம் மகிழும்.
இதனால் அவளின் ஆசிகள் நமக்கு எப்போதும் கிடைக்கும். மகாலட்சுமியின் அருளால் செழிப்பான வாழ்க்கை அமையும். வாழ்க்கை முழுவதும் மகாலட்சுமியின் அருள் குறையாமல் நிலைத்து இருக்கும். பலவிதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.