• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புத்தளத்தை தாக்கிய மினி சூறாவளி

Aug 17, 2024

புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று (16) இரவு மழையுடனான மினி சூறாவளி காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் , பொதுக் கட்டிடங்களின் கூரைகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் தொழிலாளியை அடித்துக்கொன்ற முதலாளி!

சீரற்ற காலநிலையினையடுத்து நேற்று (16) இரவு 10.30 மணியளவில் திடீரென இடியுடன் கடும் மழை பெய்ததுடன், மினி சூறாவளி காற்றும் வீசியுள்ளது.

அதேவேளை, இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக புத்தளத்தில் அனைத்து பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.

மினி சூறாவளி காற்று காரணமாக பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியில் இருந்த பல மரங்கள் முறிந்து வீழ்ந்தன.

பாலாவி , கரம்பை பகுதியில் பிரதான வீதியோரத்தில் நின்ற பெரிய மரமொன்று முறிந்து பிரதான வீதியின் நடுவே வீழ்ந்ததில் அவ்வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

யாழில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பரிதாப மரணம்

மேலும் , மினி சூறாவளி காரணமாக கரம்பை தேத்தாப்பொல ஐயனார் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்த பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் அந்த ஆலயத்தின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஆலயத்தின் பிரதம குருக்கள் குடும்பத்துடன் தங்கிருந்த வீட்டின் கூரையும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று  இரவு ஐயனார் ஆலயத்தில் வரலக்‌ஷ்மி பூஜை இடம்பெற்றதுடன், அந்தப் பூஜையில் பெரும் பக்தர்கள் கலந்துகொண்டிருந்ததாகவும் , பூஜை வழிபாடுகளை அடுத்து பக்தர்கள் தமது வீடுகளுக்கு சென்றதன் பின்னரே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ லிங்கேஸ்வர சர்மா தெரிவித்தார்.

இதேவேளை, புத்தளம் நகர சபைக்கு சொந்தமான மீன் சந்தைக் கட்டிடம் மற்றும் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த மண்டபம் என்பனவற்றின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேலும், புத்தளம் உலுக்குளம் வித்தியாலயத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டிடத்தின் கூரையும் இந்த மினி சூறாவளி காற்று காரணமாக சிறிய அளவில் சேதமடைந்திருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, புத்தளம் மீன் சந்தைக் கட்டிடம் தகரத்திலான கூரை காணப்படுவதுடன், இந்த மினி சூறாவளி காற்றினால் மீன் சந்தை கட்டிடத்தின் பல தகரங்கள் தூக்கி வீசப்பட்டருந்ததுடன், அதில் சில தகரங்கள் மின்சார கம்பிகளில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்த்தை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இதனால் புத்தளம் நகரத்தில் சில பகுதிகளில் மாத்திரம் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததுடன், மின்சார சபையின் ஊழியர்கள், புத்தளம் நகர சபை ஊழியர்கள் , புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் இணைந்து மின்சார கம்பிகளில் சிக்கிக் கொண்டிருந்த தகரங்களை நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்தனர்.

சுமார் நான்கு மணித்தியாலங்களின் பின்னர் மின்சார கம்பிகளில் சிக்கிக் கொண்டிருந்த தகரங்கள் அப்புறப்படுதப்பட்டதுடன், மின்சாரம் வழமைக்குத் திரும்பின.

நேற்று (16) இரவு புத்தளத்தில் வீசிய மினி சூறாவளி காற்று காரணமாக புத்தளம் நகர சபை எல்லைக்குற்பட்ட பகுதிகளில் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு சேதமடைந்த கட்டிடங்களை புத்தளம் நகர சபையின் செயலாளர் எல்.பி.ஜீ.பிரீத்திகா உள்ளிட்ட நகர சபையின் உத்தியோகத்தர்களும், புத்தளம் நகர சபையின் முன்னாள் நகர பிதாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட இணை அமைப்பாளருமான எம்.எச்.எம்.ரபீக் மற்றும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகளும் தேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும், மினி சூறாவளி காற்று காரணமாக தமது வீடுகள் , வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்கு சேதங்கள் எதுவும் ஏற்பட்டிருந்தால அதுதொடர்பில் தமது கிராம சேவகர்களிடம் சேதவிபரங்களை தெரியப்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed