• So. Sep 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் போதனா வைத்தியசாலையின் கவனக்குறைவு!! வெட்டி அகற்றப்பட்ட சிறுமியின் கை !

Sep 5, 2023

யாழ் இந்து ஆரம்பபாடசாலையில் கல்வி கற்கும் 8 வயது மாணவி. நன்றாக நடனமாடக்கூடிய மாணவி, நன்றாக படிக்ககூடிய மாணவி…. இந்த சிறு வயது மாணவியின் வாழ்கையை தமது கவனக்குறைவால் அழித்துள்ளார்கள் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினர். எந்த அளவு எதிர்பார்ப்புடன், கனவுடன்  இந்தக் குழந்தையை அவர்களது பெற்றோர் வளர்த்திருப்பார்கள்.

இந்த குழந்தை யாழ் நோதேன் வைத்தியசாலையில் குழந்தை வைத்தியநிபுணரிடம் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றச் சென்ற சிறுமியை குறித்த நிபுணர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க கூறியுள்ளார். அந்தச் சிறுமியின் பெற்றோரும் அங்கு  குழந்தையை அனுமதித்துள்ளார்கள்.

போதனைா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு மருந்து செலுத்துவதற்காக பொருத்தப்பட்ட கனிலா வினால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

கனிலா செலுத்தும்போது கை நாடி சேதமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதனால் கைக்கு இரத்த ஓட்டம் செல்ல முடியாமல் கை செயலிழந்துள்ளது. இதன் காரணமாகவே கையை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று இரவு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக குறித்த சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மறுநாள் சிறுமிக்கு கனூலா போடப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆகஸ்ட் 27 ஆம் திகதி தனக்கு கையில் கடும் வலி ஏற்பட்டுள்ளதாக சிறுமி அழுது புலம்பியுள்ளார். அடுத்தநாள் கை வீக்கமடைந்ததையடுத்து கனூலா அகற்றப்பட்டுள்ளது.

பின் சோதனை செய்ததில் கையிற்கு இரத்த ஓட்டம் இல்லை என அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சத்திர சிகிச்சை கூடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்த பயனும் இல்லாத காரணத்தால் சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி கனுாலா போட்ட பின் தொடர்ச்சியாக வலியால் கத்தி குளறிய போதும்  36 மணி நேரமாக சிறுமியை குறித்த விடுதிக்கு பொறுப்பான வைத்திய நிபுணரோ அல்லது விடுதி பொறுப்பாளரோ யாருமே கவனிக்கவில்லை என்பது தெளிவாகப் புலனாகின்றது.

28 ஆம் திகதி காலை கனூலா கழட்டப்பட்டுள்ளது. அப்போதே கை வீக்கம் காணப்பட்டுள்ளது.

கையிற்கு குருதி ஓட்டம் இல்லை எனக் கண்டுபிடித்து மாலை சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு எடுத்து சிகிச்சைக்கு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் 2 ஆம் திகதி இடது கை மணிக் கட்டுடன் அகற்றும் அவலம் ஏற்பட்டு விட்டது.

இவை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நேற்றைய தினம் இரு வைத்திய நிபுணர்கள் தலைமையில் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.அந்த விசாரணைக்காக வைத்திய நிபுணர்களாக பிறேமகிருஸ்ணா மற்றும் அருள்மொழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதோடு மத்திய சுகாதார அமைச்சிற்கும் முறையிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையாலோ அல்லது நடவடிக்கையாலோ நடக்கப் போவது ஒன்றும் இல்லை. தவறு இழைத்தவர்களுக்கு எந்தவித தண்டனையும் கிடைக்க மாட்டாது.  ஏன் வைத்திய தவறுகள் அல்லது கவலையீனங்கள் தொடர்பான விசாரணைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதில்லை….

ஒரு வாகனச் சாரதி தவறுதலாக விபத்தை ஏற்படுத்தினால் அவன் பிடிக்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்படுகின்றானே தவிர வாகனச்சாரதி தவறு செய்தால்  வாகனங்களைச் செலுத்தும் ஏனைய சாரதிகளை வைத்து விசாரணைக்காக நியமித்து ஆராயப்படுவதில்லை. ஆனால் வைத்தியத்துறையில் தவறு செய்பவர்களுக்கு வைத்தியத்துறையினரே விசாரனை செய்வது ஏன்?

வாகனச் சாரதிகளும் வைத்தியர்களும் பொதுமக்களின் உயிருடன் தொடர்புபட்டவர்கள். ஆனால் இரு துறையினருக்கும் இரு வேறு சட்டங்கள். இதற்கான காரணம் என்ன?

நீதிபதிக்கோ அல்லது  சட்டத்தரணிகள், சட்டத்துறையைச் சேர்ந்தவர்களுக்கோ வைத்தியத்துறையைப் பற்றிய விளக்கம் இல்லை என்றும் அவர்களுக்கு வைத்தியம் செய்வதைப் பற்றி என்ன தெரியும் என்றும் கருதுகின்றார்களா?

சிறுமியின் கையில்  கனுாலா செலுத்தியவர் யார்? சிறுமிக்கு கனுாலா செலுத்திய பின் சிறுமியின் விடுதிக்கு பொறுப்பான வைத்திய நிபுணர் எத்தனை தடவைகள் சிறுமியை பார்வையிட்டார்? சிறுமி கத்திக் குளறிய போதும் கவனம் செலுத்தாமல் இருந்தவர்கள் யார் யார் என்பதை மிகச் சுலபமாக கண்டு பிடித்து விடலாம். ஆனால் அதற்கும் ஒரு விசாரணைக் குழு எதற்கு? இவற்றை நீதித்துறையில் உள்ளவர்களால் விசாரிக்க முடியாத அளவுக்கு வைத்தியத் தவறுகள் மிகவும் சிக்கல் வாய்ந்தவையா?

அழகிய  ஒரு இளம் பிஞ்சின் வாழ்கையை அநியாயமாக சீரழித்துவிட்ட கொடூரர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு யாரும் இல்லை என்பதே வெளிப்படை உண்மையாகும்……

சுதேசமாக இயற்கையான முறையில் வைத்தியம் செய்யும் சுதேச வைத்தியர்கள் தொடர்பில் அவர்களுக்கு விசர்ப்பட்டம் கட்டி தனது பேஸ்புக்கில் வெளிப்படையாக வெளியிடும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி இந்த கவலையீனங்கள் தொடர்பில் என்ன கருத்தை வெளியிடப் போறார்?

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed