ஜெர்மனியில்(Germany) வாகன சாரதி அனுமதி பத்திர நடைமுறையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ஜெர்மனியில் உள்ள வாகன சாரதிகள் தங்களது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியில் சாரதி அனுமதி பாத்திரத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஜெர்மானியர்கள் தங்களது அடையாள அட்டைகளை தொட்டுணரக் கூடிய அட்டைகளில் அல்லாமல் டிஜிட்டல் முறையில் காட்டுவதை இலகுப்படுத்த உள்ளது.
அத்துடன், இதற்காக ஒரு சிறப்பு செயலி பயன்படுத்தப்பட உள்ளதுடன் இது பாரம்பரிய காகிதம் மற்றும் பிளாஸ்டிக் அடையாள அட்டைகளை மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஓட்டுநர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த டிஜிட்டல் உரிமம் முதலில் ஜெர்மனிக்குள் மட்டுமே செல்லுபடியாகும் என கூறப்படுகின்றது.
ஏற்கனவே டிஜிட்டல் முறையினாலான அட்டை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக திட்டம் நடைமுறைக்கு வருவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
இப்போது, அரசாங்கம் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட செயலியை அறிமுகப்படுத்த உள்ளதுடன் முதலில் சோதனை கட்டமாக கருதப்பட்டு செயலி எவ்வாறு செயற்படுகின்றது என உரிய அதிகாரிகள் கண்காணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சோதனை வெற்றிகரமாக அமைந்தால், ஜெர்மனியில் ஓட்டுநர் தகுதியை நிரூபிப்பதற்கான ஒரு நிலையான வழியாக இது மாறும் என்றும் இது உலகில் சாரதி அடையாள அட்டையை நவீனமயமாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.